"மானுடத்தின் வசந்தமிகு நாடு"
ஏனென்றால் அழகு எத்தனையோ விதங்கள், அத்தனை விதங்களையும் இம்மண்ணில் மட்டுமே பார்ததுவிட்ட எனக்கு இப்படித்தான் நினைக்கத் தோன்றுகிறது.
உலகத்தில் எங்கெல்லாமோ ஆண்டவன் எத்தனையோ அதிசயங்களையும் ஆச்சரியங்களையும் படைத்துதானிருக்கிறான்.எனக்கென்னவோ இந்த மண்ணிற்கு மட்டும்தான் இந்த வனப்புகளோ என்று எண்ணத் தோன்றிவிட்டது!
ஆமாம், இச்சிங்கபுரியை என்னுடைய அகவை அறுபத்து ஆறில் என் மனையாளுடன் கண்ணுறும் பாக்கியம் பெற்றதற்கு எங்களைப் பெற்றெடுத்து ஆளாக்கிய எங்கள் பெற்றோருக்கும், நாங்கள் பெற்றெடுத்த பிள்ளைகளுக்கும், நாங்கள் பெறாத நல்ல உள்ளங்களுக்கும் மற்றும் நான் வணங்கும் தெய்வத்திற்கும்தான் நன்றி சொல்லவேண்டும்!
மானுடத்தின் மாண்புகளுக்கு ஒரு மதிப்பு இருக்கிறது என்றால் இம்மண்ணில் ஒரு சிற்றெறும்பின் சுறு சுறுப்பும், அதைப் போன்ற உண்மையான உழைப்பும், அந்த உழைப்பில் இருக்கும் உயர்வும், அந்த உயர்வில் கிடைக்கும் வாழ்வும், அந்த வாழ்வில் கிடைக்கப்பெறும் மகிழ்வும், அந்த மகிழ்ச்சியில் கிடைக்கும் ஆத்ம திருப்தியும் பெற்ற மக்களை கண்ணுற்றபோது எவ்வித கண்ணேறும் பட்டுவிடக்கூடாது இந்த நாட்டுக்கு என்றுதான் நினைக்கத்தோன்றுகிறது எனக்கு. இம்மண்ணை வளப்படுத்தியவர்களில், இம்மண்ணை மாண்புற வைத்தவர்களில் நமது சொந்தமண்ணின் வழித்தோன்றல்களுக்கும் பங்கிருக்கிறது என்றால் அதுவும் நமக்கு ஒரு மிகப்பெரிய பெருமையே!
இச் சிறிய நாட்டில், சிறிய நாடா? ஆம் நாடுதான் சிறியது, நாட்டின் வளர்ச்சியோ அளவிடமுடியாதது!
கடல் சூழ்ந்த சிங்கார சோலைகள் நடுவே ஓர் சொர்க்கபுரி என்றாலும் தகும். இப்படியொரு சொர்க்கபுரியை உருவாக்க இந் நாட்டு மக்களின் ஒற்றுமையும், உழைப்பும், தியாகமும், நம் நாட்டவர்களின் விசுவாசமான உழைப்பும், திருக்கோவில்களும் இங்குள்ள வழிபாடுகள், ஒழுங்குமுறைகள், பிறசமய ஒற்றுமை, சகிப்புத்தன்மை ஆகியவற்றோடு இந்த நாட்டின் வளர்ச்சிக்கு எல்லாம் வல்ல இறைவனின் பரிபூர்ண திருவருளுமே காரணமாயிருக்கும் என்றால் அது மிகையல்ல!
-ரா. வேங்கடம்
ஏர்வாடி, நெல்லை மாவட்டம்
தமிழ் நாடு, இந்தியா

