Thursday, February 5, 2009

ஆஸ்கர் விருதுகள்...A.R.ரஹ்மானைத் தேடி...

இளம் வயதிலேயே தந்தையை இழந்து வறுமையில் வாடியவர். முட்களே நிறைந்த வாழ்க்கையில் ரோஜாவுடன் தமிழ்த் திரையுலகிற்கு அடியெடுத்து வைத்தவர்.

தமிழ் ரசிகர்கள் ஹிந்தித் திரைப்படப் பாடல்களை முணுமுணுத்துக் கொண்டிருந்த காலகட்டத்தில் அவர்களைத் தமிழ்ப் பாடல்களைக் கேட்க வைத்தவர் இளையராஜா. தமிழ் ரசிகர்களை மீட்டவர் இளையராஜா என்றால் தமிழறியாதவர்களையும் தமிழ்ப் பாடல்களை முணுமுணுக்கச் செய்த பெருமைக்குரிய‌வர் ரஹ்மான்.

த‌மிழ்ப் பாட‌ல்க‌ளுக்கு ம‌ட்டும‌ன்றி பிறஇந்திய மொழிப் பாடல்களுக்கும் இசையமைத்துக்கொண்டிருந்தவர் இப்போது ஹாலிவுட் படங்க‌ளுக்கும் இசையமத்துக்கொண்டிருக்கிறார்.

அவரது திறமைக்குக் கிடைத்த விருதுகள் ஏராளம். அந்த வரிசையில் அவர் சமீபத்தில் பெற்ற விருது Golden global award. 'Slumdog Millionair' என்ற ஹிந்தி திரைப்படத்திற்காக அவர் இசையமைத்த 'jai ho' என்ற பாடலுக்கு அந்த விருது கிடைத்திருக்கிறது. இந்த விருதைப்பெற்ற முதல் இந்தியர் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார்.

இது மட்டுமல்ல. விருதுகள் அவருக்காக வரிசை பிடித்து நிற்கின்றன.ஆம், ஒன்றல்ல, இரண்டல்ல, மூன்று ஆஸ்கர் விருதுகளுக்கு அவர் பரிந்துரைக்கப் பட்டிருக்கிறார். மேற்கூறிய அதே ஹிந்திப் பாடலுக்காகத்தான் அவர் மிகப்புக‌ழ்வாய்ந்த ஆஸ்கர் விருதுக்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளார். ஒரே நபருக்கு மூன்று பரிந்துரைகள், அதுவும் ஆஸ்கர் விருதுக்கு என்பதே மிகப்பெரிய பெருமை அல்லவா? இம்மாதம் 22ம் தேதி விருதுகள் அறிவிக்கப்படவுள்ளன. அவருக்கு மூன்று விருதுகளுமே கிடைக்க வாழ்த்துவோம்.

மேலும் ஆஸ்கர் விருதுக்கு இணையான BAFTA ( British Academy for Film and Television Arts )விருதுக்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளார். விருது வரும் 8ம் தேதி அறிவிக்கப்படவுள்ளது. இவ்விருதையும் அவர் பெற வாழ்த்துவோம்.

அவரது இசையமைப்பில் வந்த பாடல்களில் என்னை மிகவும் கவர்ந்த‌ பாடல்
"வெள்ளைப் பூக்கள் உலகம் எங்கும் மலர்கவே
விடியும் பூமி அமைதிக்காக விடிகவே
மண்ணில் மஞ்சள் வெளிச்சம் விழுகவே
மலரே சோம்பல் முறித்து எழுகவே
குழந்தை சிரிக்கட்டுமே தாயின் கதகதப்பில்
உலகம் விழிக்கட்டுமே பிள்ளையின் பூமுக சிரிப்பில்..."

அவர் இசையமைத்து அவரே பாடிய பாடல் இது. உலகம் இப்போது இருக்கும் சூழ்நிலைக்குத் தேவையான கருத்தாழமிக்க பாடல். இதுவரை இப்பாடலின் வரிகளை உன்னித்துக் கேட்காதவர்கள் ஒருமுறை கேட்டுப்பாருங்கள். நிச்சயம் உங்களையும் கவரும்!

2 comments:

raadh said...

A.R. ரஹ்மானுக்கு வாழ்த்துக்கள். நான் ரஹ்மானின் பாடல்களை ரசிப்பதுண்டு என்றாலும் அவருடைய ரசிகன் இல்லை! இது என்ன முரண்பாடு? அதனால், அவருடைய சாதனைகளைக் குறைத்து மதிப்பிடுவதாகப் பொருள் இல்லை. சாதனையாளர்களில் பலர் மக்களை விட்டு விலகிச் செல்வதை என்னால் ஏற்கமுடிவதில்லை! இளையராஜாவை ரசித்த மனது ரஹ்மானை ரசிப்பதில்லை, கண்ணதாசனை ரசித்த அளவு வைரமுத்துவை ரசிப்பதில்லை, அப்துல் கலாமை நேசிக்கும், மதிக்கும் அளவு மன்மோகன் சிங்கை மதிப்பதில்லை, கபில் தேவை ரசித்த மனது தோணியை அவ்வளவு ரசிப்பதில்லை. இவ்வளவு ஏன்..... சம்பந்தம் இல்லாமல் ஒபாமாவை ரசிக்கும் மனதிற்கு புஷ்ஷைப் பிடிக்கவில்லை! Some achievers have low People-connecting factor! இது என் கருத்து.

Gomathi said...

ஆம்! ஒன்று மனதுக்குப் பிடித்துப் போய்விட்டால் வேறொன்று நல்லதாகவே இருந்தாலும், அதை அறிவு ஒத்துக்கொண்டாலும் மனம் ஒத்துக்கொள்வதில்லை. ஒரு விசயம் நமக்கு மிகவும் பிடித்துப் போவதற்கும் பிடிக்காமல் போவதற்கும் பல சமயங்களில் காரணமே இருப்பதில்லை. வருகைக்கு நன்றி!